காஷ்மீரில் இன்று காலை பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதிலில் 10 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் தீவிரவாதிகள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் அமைந்துள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறிப்பிட்டார்.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தாங்தர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நேற்று இரவு முதல் பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இரண்டு இந்திய இராணுவத்தினர் பலியாகினர். பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, பாகிஸ்தான் இராணுவ நிலைகள் மீது இந்திய இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. பீரங்கிகள் மற்றும் சிறிய ரக ரொக்கெட் லோஞ்சர்கள் மூலம் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதாக இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் தெரவித்தார்.
அத்துடன் பாகிஸ்தான் பகுதியிலிருந்த 7 தீவிரவாத முகாம்களைக் குறிவைத்தும் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 4 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டார்கள் எனவும் இந்திய இராணுவத் தளபதி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.